நாமக்கல், டிச.1: நாமக்கல் நகரில் ஏடிஎஸ்பி தலைமையில், 300 போலீசார் திடீரென ஊர்வலமாக சென்றதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று காலை 8 மணியளவில் டிஎஸ்பி காந்தி தலைமையில், இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்ஐ தங்கம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் தலைமையில், நாமக்கல், சேந்தமங்கலம், புதுச்சத்திரம்,மோகனூர் உள்ளிட்ட 10 காவல் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள், போலீசார் என 300 பேர் திடீரென கையில் லத்தி, தடுப்புகவசத்துடன் (சீல்டு) கூடினார். கலவர நேரத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம், அதிரடிப்படை வாகனம் ஆகியவையும் பூங்கா சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்களிடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது. காலை 8.45 மணிக்கு ஏடிஎஸ்பி ரவிக்குமார் அங்கு வந்தார். இதையடுத்து போலீசார், பூங்காசாலையில் இருந்து அணிவகுத்து பரமத்திரோடு, கோட்டைரோடு, மெயின்ரோடு வழியாக ஊர்வலமாக நடந்து சென்றனர். அவர்களின் பின்னால் போலீஸ்வாகனங்களும் அணிவகுத்து சென்றது. இந்த ஊர்வலத்தில் வந்த போலீசார் எந்த வித பேனர்களையும் பிடித்துசெல்லவில்லை.