திருவண்ணாமலை, நவ.27: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், நிவர் புயல் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அதன்படி, சாத்தனூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 119 அடியில் தற்போது 89.55 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. மொத்த கொள்ளளவான 7,321 மில்லியன் கன அடியில், 2,435 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 381 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.அதேபோல், குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 60 அடியில், 37.32 அடி நிரம்பியிருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மிருகண்டா அணையின் மொத்த உயரமான 22.97 அடியில், தற்போது 7.22 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.இந்நிலையில், ஜவ்வாதுமலை பகுதியில் பெய்த கனமழையால், மலையில் இருந்து காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. அதனால், ஜவ்வாதுமலையையொட்டி அமைக்கப்பட்டுள்ள படவேடு செண்பகத்தோப்பு அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 6 ஆயிரம் கனஅடி தண்ணீரையும் முழுமையாக ஏரிகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அதனால், கமண்டல நாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.