திருவண்ணாமலை, நவ.25: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழாவின் 5ம் நாள் உற்சவம் நேற்று நடந்தது. கோயில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி வந்து அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்கி நடந்து வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, வழக்கமாக நடைெபறும் சுவாமி மாடவீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக, திருக்கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி உலா தினமும் நடந்து வருகிறது. அதன்படி, கார்த்திகை தீபத்திருவிழாவின் 5ம் நாளான நேற்று சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர், காலை 11 மணியளவில் விநாயகர், சந்திரசேகரர் ஆகியோர் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி, 5ம் பிரகாரத்தில் பவனி வந்தனர். அதைத்தொடர்ந்து, இரவு 8 மணியளவில் கோயில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி நடந்தது. அப்போது, விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி தனித்தனி வாகனங்களில் பவனி வந்தனர். ஆனாலும், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கவில்லை.