திருவண்ணாமலை, நவ.25: நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக, திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி மற்றும் கடலூர் செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயலால், கடலோர மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதோடு, 120 கிமீ வேகத்தில் காற்று வீசும், கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதனால், சாலையோர மரங்கள், மின்கம்பங்கள் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அதையொட்டி, போக்குவரத்தை இயக்குவதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி, கடலூர் செல்லும் அனைத்து பஸ்களும் நேற்று மதியம் 2 மணியில் இருந்து நிறுத்தப்பட்டது. அதேபோல், விழுப்புரம் செல்லும் பஸ்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.