ஊட்டி, நவ. 22: 8 மாதங்களுக்கு பின் ஊட்டி சகஜ நிலைக்கு திரும்பியது. வழக்கம்போல் பூங்காக்கள் மற்றும் கடை வீதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த மாதம் முதல் நீலகிரி மாவட்டதுக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டது. துவக்கத்தில் இ பாஸ் முறை அமலில் இருந்தது. இதனால், குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துச் சென்றனர். தற்போது இ பாஸில் தளர்வு அளிக்கப்பட்டு, இ என்ட்ரி மட்டும் செய்தால் போதுமானது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து இம்மாதம் துவக்கம் முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. கடந்த வாரம் மட்டும் ஒரே நாளில் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். அதன்பின் கூட்டம் குறையாமல் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர்.