வேட்டவலம், நவ.21: வேட்டவலத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேட்டவலம் பேரூராட்சி, அண்ணா நகரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், மீண்டும் டாஸ்மாக் கடையை அதே பகுதியில் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி, அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று டாஸ்மாக் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு, கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, கடைக்கு செல்லும் வழியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.