குன்னூர், நவ.20: குன்னூரில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் குடியிருப்புகளுக்கு வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கியதால் அப்பகுதி மக்கள் நேற்று தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் ஆற்றை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவது அதிகரித்து கொண்டே வருவதால், ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, குன்னூரில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு மாற்று வீடு திட்டத்தின்படி கேத்தி அருகே உள்ள பிரகாசபுரம் பகுதியில் 172 மாற்று வீடுகள் கட்டப்பட்டு, அதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழையால் குன்னூர் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் வாழும் மக்கள், பாதுகாப்பு கருதி சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.கண்ணிமாரியம்மன் கோயில், எம்ஜிஆர் குப்பம், சித்தி விநாயகர் கோயில் தெரு ஆகிய பகுதிகள் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. எனவே, அவர்களுக்கு மாற்று வீடு வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆய்வுகள் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதற்கு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் எம்ஜிஆர் நகர் பகுதியில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள 87 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்க முடிவு செய்து, முதற்கட்டமாக 16 வீடுகளில் நேற்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதற்குள் அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த வெலிங்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர், அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், தாசில்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மாவட்ட கலெக்டரிடம் முறையிட போவதாக தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.