அரியலூர், நவ. 6: அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்ககோரி ஆனந்தவாடி சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்கு ஆனந்தவாடி கிராமத்தில் 1982ம் ஆண்டு 161 விவசாயிகளிடம் 270 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2,500 கொடுக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை நிலம் கொடுத்த ஆனந்தவாடி விவசாயிகளுக்கு வேலை வழங்கவில்லை.
இதையடுத்து தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள அரியலூர் அரசு சிமென்ட் ஆலையில் விவசாயிகளுக்கு தகுதியுள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டுமென ஆனந்தவாடியில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் நடந்து கொண்டிருந்த வேலையை தடுத்து நிறுத்தி வாகனத்தை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெளியேற்றினர். பின்னர் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.