ஏரி மண் கடத்திய 13 பேர் கைது 11 டிராக்டர், 2 பொக்லைன் பறிமுதல் போளூர் அருகே செங்கல் சூளைக்கு

போளூர், நவ.5: போளூர் அருகே செங்கல் சூளைக்கு ஏரி மண் கடத்திய 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 11 டிராக்டர்கள், 2 பொக்லைன் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். போளூர் அடுத்த மண்டகொளத்தூர் ஏரியில் நேற்று 11 டிராக்டர்கள், 2 பொக்லைன் இயந்திரம் மூலம் சிலர் மண் அள்ளி கொண்டிருந்தனர். அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டபோது, செங்கல் சூளைக்காகதான் ஏரி மண்ணை எடுத்து செல்கிறோம், உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என மண் கடத்தியவர்கள் மிரட்டினார்களாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் எஸ்பி அரவிந்துக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில், சிறப்பு போலீஸ் படையினர் மற்றும் போளூர் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் மண்டகொளத்தூர் ஏரிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது, ஏரி மண்ணை கடத்தி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், கருணாகரன், சிவக்குமார், முத்துராமன், சாந்தகுமார், கமலக்கண்ணன், மணிகண்டன், விஜயகுமார், வேதகிரி, அண்ணாதுரை, சுரேஷ் மற்றும் பொக்லைன் டிரைவர்கள் கார்த்திகேயன், சத்யபிரகாஷ் ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஏரி மண் கடத்திய 11 டிராக்டர்கள், 2 பொக்லைன் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: