திருச்சி, நவ. 1: திருச்சியில் தேவர் ஜெயந்தியையொட்டி வழிமாறி பேரணி வந்த தகராறில் உறையூரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சியில், பொன் முத்துராமலிங்க தேவரின் 113வது தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையொட்டி நேற்று முன்தினம் சீராத்தோப்பு பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி சூபர்வைசர் பிரேம்குமார் (23) தலைமையில் 16 பேர் வயலூரில் இருந்து புறப்பட்டு மத்திய பஸ் நிலையப்பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க பைக்கில் வந்தனர். அப்போது அதில் 3 பேர் வழிமாறி உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெரு வழியாக வந்தனர். மற்றவர்கள் வரட்டும் என அங்கு காத்திருந்த போது, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டு ரீப்பர் கட்டையால் தாக்கினர். இதில் ஊர்வலம் வந்த 3 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.