திருப்பூர், அக். 30: திருப்பூர், முருகம்பாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் கடையை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் முருகம்பாளையத்தில் இருந்து பாறைக்காடு செல்லும் வழியில் கடந்த ஒரு மாதத்துக்கும் முன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ளதால் இக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ஏற்கெனவே மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அதே பகுதியைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.