கலசபாக்கம், அக்.18: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வட்டார பேரவைக் கூட்டம் நேற்று முன்தினம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். துணை பிடிஓபார்வதி, பணி மேற்பார்வையாளர் சந்தோஷ்குமார், வட்டார செயலாளர் பிரேம்குமார் முன்னிலை வகித்தனர். வட்டார பொருளாளர் மகேஸ்வரி வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி மற்றும் ஒப்படைப்பு விடுப்பு தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணினி உதவியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.