ஊட்டி, அக்.2: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான இன்று 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: காந்தி ஜெயந்தியையொட்டி இன்று 2ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்து விவாதித்தல், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் போன்ற தலைப்புகளில் விவாதிக்கப்பட உள்ளது.