கோவை, அக். 1: பால் உணவு பொருட்கள் ஒன்று முதல் 4 நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், காலவதி தேதியை குறிப்பிட வேண்டும் எனவும் வணிகர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலுடன் சேர்த்து கோயா, சேனா, சர்க்கரை மற்றும் பிற பொருட்களில் இருந்து இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுகிறது. இவை குறைந்த ஆயுளை கொண்டது. எனவே, பால் உணவு பொருட்களை ஒன்று முதல் 4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்தினால் அது நஞ்சாகிவிடும். மேலும், இனிப்பு பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் நபர்கள் போதிய சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். உணவு பொருட்கள் பேக்கிங் மீது காலாவதி தேதி குறிப்பிட வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவு பொருளில் எண்ணெய், நெய் பயன்படுத்தப்பட்டதா? என குறிப்பிட வேண்டும்.