பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ₹30 ஆயிரம் கொள்ளை 3 பேருக்கு போலீஸ் வலை செய்யாறு அருகே நள்ளிரவு துணிகரம்

செய்யாறு, செப்.30: செய்யாறு அருகே நள்ளிரவில், பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி, ₹30 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த புதுப்பாளையம் கூட்ரோடில் சுந்தர வடிவேலு என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில், பெட்ரோல் போடுவதற்காக ஒரே பைக்கில் 3 நபர்கள் வந்தனர். அப்போது, பெட்ரோல் பங்க்கில் செய்யாறு பகுதியை சேர்ந்த கேஷியர் கோட்டீஸ்வரன்(42), பம்ப்மேன் மோகன்ராஜ்(27) ஆகியோர் அங்கு பணியில் இருந்தனர். அவர்களிடம், பைக்கிற்கு பெட்ரோல் போடுமாறு கூறிய மர்ம நபர்கள், திடீரென கேஷியர் கோட்டீஸ்வரனை தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டனர். பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். பையில் ₹30 ஆயிரம் வரை ரொக்கம் இருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்து கோட்டீஸ்வரன் நேற்று தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஷாகின் வழக்குப்பதிந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். மேலும், பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான உருவங்களை வைத்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகிறார்.

நள்ளிரவில் பெட்ரோல் பங்க்கில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: