ஆம்லெட் கேட்டு தகராறு ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேருக்கு சரமாரி அடி 4 வாலிபர் பேர் கைது

வேட்டவலம், மார்ச் 18: ஆம்லெட் கேட்டு தகராறு செய்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். வேட்டவலம் அடுத்த காட்டுவேளானந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுவரன். ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 15ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த பாபு(22), சோமாஸ்பாடி கோயில்மேடு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(25), சுஜித்(20), கீழ்நாச்சிப்பட்டு விஜயச்சந்திரன்(21), சின்னராசு ஆகியோர் குடிபோதையில் சாப்பிட வந்தனர். அப்போது பாபு, ரகுவரனை ஆபாசமாக பேசி ‘எனது நண்பர்களுக்கு ஆம்லெட் போட்டு கொடு' என கூறினாராம். அதற்கு ரகுவரன், ‘பரோட்டா போட்டுக் கொண்டு இருக்கிறேன். சிறிது நேரத்தில் ஆம்லெட் கொடுத்துவிடுகிறேன்' என்றாராம்.

இதனால், ஆத்திரமடைந்த பாபு, ஸ்டீபன்ராஜ் உட்பட 5 பேரும் ரகுவரனை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதனை தடுக்க முயன்ற அதே கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன்(35), ரகுவரனின் உறவினர் வள்ளி ஆகியோரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில், படுகாயமடைந்த ரகுவரன், கார்த்திகேயன் மற்றும் வள்ளி ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, கார்த்திகேயன் வேட்டவலம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்குப்பதிந்து பாபு, ஸ்டீபன்ராஜ், சுஜித் மற்றும் விஜயச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சின்னராசுவை தேடி வருகின்றனர்.

Related Stories: