சிவகாசி, மார்ச் 18: சிவகாசி பகுதியில் லோடு ஆட்டோவில் பள்ளி மாணவர்கள், ஆட்களை ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்படும் ஆபத்து நிலவுகிறது. சிவகாசி பகுதியில் காவல் துறையினர் திரும்பிய பக்கமெல்லாம் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர். ஆனால் லோடு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றி செல்வோர் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. மக்கள் கூறுகையில், லோடு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி செல்ல கோர்ட் தடை விதித்துள்ளது. மேலும் லோடு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி சென்றால் அந்த வாகனத்தில் உரிமத்தை ரத்து செய்வதோடு ஓட்டுனரின் உரிமத்தையும் பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.