நாமக்கல், மார்ச் 17: கொரோனா வைரஸ் எதிரொலியாக, பொட்டிரெட்டிப்பட்டியில் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க, ஒரு இடத்தில் அதிகமான நபர்கள் கூடுவதை தடுக்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டியில் இன்று(17ம் தேதி) நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டியில், பார்வையாளர் கலந்து கொள்ள அனுமதியில்லை என கலெக்டர் மெகராஜ் அறிவித்திருந்தார். காலை 8.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி நேரம் வரை போட்டி நடத்தப்படும். மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே 3 முறை பொட்டிரெட்டிப்பட்டியில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு, பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.