விருத்தாசலம், மார்ச் 13: ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜ்குமார். இவரது தாய் இந்திரா காந்தி மற்றும் அதே பகுதியை சேர்ந்த கதிரவன், அவரது மனைவி செல்வநாயகி, தனலட்சுமி, ஞானவடிவு மற்றும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், தங்கள் பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் குழுக்கள் திட்டம் என்ற முறையில் பல கோடி வசூல் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளிக்க விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது சப்-கலெக்டர் இல்லாததால், அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறியதாவது: தங்கள் பகுதிகளில் அம்பாள் சிட்பண்ட்ஸ், இமயம் லேண்ட் புரமோட்டார்ஸ், விஜே லேண்ட் புரமோட்டார்ஸ் மற்றும் குபேரன் குழுக்கள் திட்டம் என்ற பெயரில் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட தரகர்களை வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் சீட்டு கம்பெனி நடத்தினர். அதில் மாதம் 999 ரூபாய் கட்டி ஒவ்வொரு மாதமும் குலுக்கல் நடைபெறும். அப்போது குலுக்கலில் தேர்வு பெறும் நபர்களுக்கு 3 சென்ட் இடம் அல்லது இரு சக்கர வாகனம் வழங்கப்படும். அவ்வாறு குலுக்கலில் தேர்வு பெறாத நபர்களுக்கு 50 மாதம் முடிவடையும் போது கட்டாயமாக 3 சென்ட் இடம் வழங்கப்படும் என விதிமுறைகள் வைத்து பணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு மாதமும் எந்த குலுக்கலும் நடைபெறவில்லை. யாருக்கும் மனைப்பட்டா வழங்கவில்லை. இந்நிலையில் 50 மாதங்கள் முடிவடைந்தும் எதுவும் வழங்காமல் இருந்து வந்தனர்.