ஈரோடு, மார்ச் 13: கோடைகாலம் துவங்கிய நிலையிலும் தட்டுப்பாடின்றி தீவனம் கிடைப்பதால் ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் நேற்று மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இருப்பினும், 85 சதவீதம் மாடுகள் விற்பனையானது.ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை செக்போஸ்ட் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று நடந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். சந்தையில் 300 பசுமாடுகளும், 150 எருமை மாடுகளும், 100 வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. வழக்கமாக, கோடைக்காலம் தொடங்கினால் தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டு மாடுகளை விற்பனை செய்வதற்காக அதிகமாக கொண்டு வருவார்கள். தற்போது தீவனம் பற்றாக்குறை இல்லாமல் கிடைத்து வருவதால் நேற்று நடந்த சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தது.