சென்னை: வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி போலி கால்சென்டர் நடத்தி பொதுமக்களிடம் பல லட்சம் பணத்தை மோசடி செய்ததாக பென்ஸ் கிளப் உரிமையாளர் சரவணன் உட்பட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பொதுமக்களை செல்போனில் தொடர்பு கொண்டு வங்கியில் லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி வங்கி ஆவணங்களை பெற்று பல லட்சம் மோசடி செய்து வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தொடர் புகார்கள் வந்தது. அந்த புகாரின் படி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி போலி கால் சென்டர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அண்ணாசாலையில் உள்ள பென்ஸ் கிளப்பின் ஒருபகுதியில் போலி கால்சென்டர் இயங்கி வருவதாக மத்திய குற்றப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அண்ணாசாலையில் உள்ள பென்ஸ் கிளப்பில் அதிரடியாக சோதனை நடத்தினர்.