ஊட்டி, மார்ச் 12: கோடை சீசன் துவங்கும் நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பார்க்கிங் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்ற போதிலும், அதற்கு ஏற்ற பார்க்கிங் வசதி செய்து தரப்படாமல் உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கோடை சீசன் துவங்கியவுடன் அனைத்து சாலைகளும் ஒரு வழிப்பாதையாக மாற்றுவது, போதிய பார்க்கிங் வசதிகள் இல்லாதது உட்பட பல்வேறு கட்டுபாடுகளால் பல்வேறு பிரச்னைகளை உள்ளூர் மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது.எனவே, பார்க்கிங், சாலை மற்றும் நடைபாதை மற்றும் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இம்மாதம் இறுதியில் கோடை சீசன் துவங்கிவிடும். அதற்குள் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.