புதுச்சேரி, மார்ச் 12: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட மாகே பிராந்தியத்தில் கொரோனா பீதியால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் யுகான் பகுதியில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகத்தின் நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் உலகமே இந்த வைரசால் கலக்கம் அடைந்துள்ளது. கொரோனா தொற்றால் சீனாவில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளில் இதனால் நோயாளிகள் இறந்து வருகின்றனர். இதனிடையே இந்தியாவுக்கும் இந்த நோய் பரவியுள்ளதால் நாட்டில் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. குறிப்பாக ஐதராபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் கொரோனா அறிகுறிகளுடன் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம்போல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் மாணவர்கள் தனி அறையில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.