திருக்கழுக்குன்றம், மார்ச் 11:திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தேசுமுகிப்பேட்டை, செங்கல்பட்டு செல்லும் சாலையில் வெள்ளைக்குளம் என்ற பெயரில் ஒரு குளம் அமைந்துள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான இந்த குளத்தின் நீரை, கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தினர். அந்த நேரத்தில் தூய்மையாக இருந்த இக்குளம் காலப்போக்கில் அசுத்தம் நிறைந்த குளமாக மாறியுள்ளது.இந்த குளத்தின் கரைப் பகுதியில் வசிப்பவர்கள், மட்டுமின்றி குளத்தைச் சுற்றி வசிப்பவர்களும், தங்களது வீட்டு கழிவுகளை இந்த குளத்தில் வீசுகின்றனர். நீர்வரத்து கால்வாயிலும் கழிவுநீர் விடப்படுவதால் குளத்தின் தன்மை மாறி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், குளத்தின் நீரும் நிறம் மாறி சாக்கடை போல் காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டியுள்ளது.