சேலம், மார்ச் 11: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள சீனா, ஈரான், இத்தாலி, ஜப்பானுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என செல்போன் நிறுவனங்கள் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பி அரசு அறிவுறுத்தி வருகிறது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் வேமாக பரவியது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சீனாவில் இருந்து ஈரான், இத்தாலி, ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என உலகின் பல்வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செல்போன் ரிங்டோன் மூலம் கொரோனா பரவல் பற்றியும், உடனடியாக மருத்துவ உதவி எண்ணை தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.