ராஜபாளையம், மார்ச் 11: ராஜபாளையத்தில் நடந்த மகளிர் தின விழாவில் பெண் ஊராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தில் செயல்படும் தன்னார்வ அமைப்பின் சார்பில், தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தன்னார்வ அமைப்பின் தலைவர் தலைமலை ஏற்பாட்டின் படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான தாமரை ஊரணி கரைப் பகுதி பொக்லைன் இயந்திரம் மூலம் சமப்படுத்தப்பட்டது. தாமரை ஊரணி கரை மற்றும் முத்துச் செட்டி ஊரணி கரையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கமாரியம்மாள், ராஜேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் ஏசம்மாள், ஒன்றிய மேற்பார்வையாளர் கிரிஸ்லின் ஆகியோர் ஆலமரம், விளா மரம் மற்றும் மருத மரங்களை நட்டு வைத்தனர். இந்த மரங்களை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.