திண்டுக்கல், மார்ச் 11: விபத்து இழப்பீடு வழங்காமல் இழுத்தடிக்கும் திண்டுக்கல் மேற்கு தாசில்தாரைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. திண்டுக்கல் மேற்கு தாலுகாவுக்கு உட்பட்ட சிரங்காடு கிராமம் ஒட்டக்கோவில்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் கடந்த 2004ம் ஆண்டு கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மண் சரிவில் சிக்கினார். இந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்டு கோமா நிலையில் கந்தசாமி சிகிச்சை பெற்று ஓரளவு குணமானார். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக கிணற்றின் உரிமையாளரிடம் உரிய இழப்பீட்டு தொகையை சட்டப்படி வசூல் செய்து தருமாறு கடந்த 2010ம் ஆண்டு தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.