கோபி அருகே வெல்டிங் ஒர்க்ஷாப்பில் தீ விபத்து

கோபி, மார்ச் 11: கோபி அருகே உள்ள கூகலூரில் வெல்டிங் ஒர்க்ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கூகலூரை சேர்ந்தவர் வேலுமணி. இவர், தனது வீட்டின் முன் பகுதியில் வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்த ஒர்க்ஷாப்பில் கதவு, ஜன்னல் போன்றவை இரும்பு மற்றும் மரத்தால் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வேலுமணி வழக்கம் போல் பணி முடிந்த பிறகு ஒர்க்ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அதிகாலையில் ஒர்க்ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக வேலுமணிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அனைவரும் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், தீயை அணைக்க முடியவில்லை. தகவல் அறிந்த கோபி தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் ஒர்க்ஷாப்பில் இருந்த இயந்திரங்கள், மர பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: