லால்குடி, மார்ச் 10: லால்குடி அருகே ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த பள்ளி மாணவியின் சாவில் மர்மம் உள்ளது என கூறி பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரை அடுத்த அயன் சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி புஷ்பவள்ளி. இவர்களது மகள் ரேகா (16). இவர் லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே உள்ள வடுகர்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வந்து விடுமுறை முடிந்து திரும்பவும் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த 19ம்தேதி காலை பள்ளி நிர்வாகத்திடமிருந்து ரேகாவின் தந்தைக்கு போன் செய்துள்ளனர். உங்களது மகள் ரேகா இரவு சிறப்பு வகுப்புகள் முடிந்து விடுதிக்கு திரும்ப வரவில்லை என தெரிவித்துள்ளனர். உடனே தனது கிராமத்திலிருந்து வடுகர்பேட்டையில் உள்ள பள்ளி மற்றும் அந்த பகுதியில் அவரை தேடி வந்த நிலையில் மாலை வரை கிடைக்காததால் கல்லக்குடி போலீசில் தந்தை நடராஜன் புகார் கொடுத்துள்ளார். பின்னர் இரவு 9 மணிக்கு கல்லக்குடி காவல் நிலையத்திலிருந்து, ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ள மாணவி உங்கள் மகள்தானா என்நு வந்து பாருங்கள் என ரேகாவின் தந்தையிடம் தகவல் தெரித்துள்ளனர்.