கொடைக்கானல், மார்ச் 10: கொடைக்கானலில் விவசாயிளுக்கு வழங்கிய நலத்திட்டங்களில் முறைகேடு புகார் நிருபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை உறுதி என தமிழ்நாடு தோட்டக்கலை கூடுதல் இயக்குனர் கண்ணன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில விவசாயிகளுக்கு பாசன குழாய்கள், பழ நாற்றுகள், நிழற்போர்வை, விதைகள், தேன் பெட்டிகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கியதில், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் அளித்தனர். இதனை விசாரிக்க தமிழக அரசு நியமித்த தமிழ்நாடு தோட்டக்கலை கூடுதல் இயக்குனர் கண்ணன் கொடைக்கானலில் கடந்த பிப் 4, 5 தேதிகளில் விசாரணை நடத்தினார். முதல்நாளில் புகாரில் குறிப்பிட்டிருந்த விவசாய இடுபொருட்களின் கோப்புகளை ஆய்வு செய்து, அதில் பதிவான தகவல்களை சேகரித்து கொண்டார். தொடர்ந்து அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் அரசின் சார்பில் வழங்கப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்களையும் பெற்று, அது எவ்வாறு விநியோகிக்கப்பட்டது என்பது குறித்த கோப்புகளையும் ஆய்வு செய்தார்.