நாமக்கல், மார்ச் 10: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் முன்னிலை வகித்தார். இதில், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கலந்து கொண்டு, நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார். கூட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் அனுபவங்கள், மாநில தேர்தல் ஆணையத்தின் பல்வேறு பணிகள் கணினிமயமாக்கப்பட்டு இருப்பதன் பயன்கள் குறித்தும் விளக்கமளித்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.