திருச்சி, மார்ச் 5: திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம், நந்தி கோயில் தெருவில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் மாசி மகத் திருவிழாவின் 6ம் நாளான நேற்று சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் அருகில் நந்தி கோயில் தெருவில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை நாகநாதசுவாமி கோயிலில் மாசிமகத் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் சுவாமி, அம்பாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது. இதில் 5ம் நாளான நேற்று முன்தினம் இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாட்டுடன் 63 மூவர் இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து 6ம் நாளான நேற்று காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கோயிலில் சுவாமி, (நாகநாதர்-ஆனந்தவல்லி) அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.