வந்தவாசி, மார்ச் 5: வந்தவாசியில் நீதிமன்ற கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி வக்கீல்கள் நேற்று தொடங்கி 4 நாட்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வந்தவாசி நீதிமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. பழைய கட்டிடத்தில் போதுமான இடவசதி இல்லாததால் சிவில் வழக்கு நடத்துவதற்கு, ஏற்கனவே உள்ள கட்டிடத்தின் அருகில் சிமென்ட் சீட்டாலான கூரை அமைத்து நீதிமன்றம் நடந்து வருகின்றது. மேலும், சார்பு நீதிமன்றம் செயல்பட உள்ள நிலையில் அதற்கான கட்டிட வசதி இல்லாததால், புதிய கட்டிடம் கட்ட மாநில நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியை வருவாய்த்துறையினர் செய்து வருகின்றனர். இதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கும் பணி தடை ஏற்பட்டது. இதுகுறித்து வக்கீல்கள், சட்டத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர், உயர் நீதிமன்ற பதிவாளர், மாவட்ட நீதிபதி ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, அதற்கான இடத்தினை வக்கீல்களை தேர்வு செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தென்னாங்கூர், மும்முனி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடங்களை பார்வையிட்டனர்.