நாகை, மார்ச் 3: கீழையூர் பகுதி கடற்கரை கிராமங்களில் கடலை பயிர் சாகுபடி இழப்புக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர். நாகை கலெக்டர் அலுவலகத்தி–்ல் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிஆர்ஓ இந்துமதி தலைமையில் நடந்தது. கீழையூர் அருகே கடற்கரை கிராமங்களான வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி, விழுந்தமாவடி, காமேஸ்வரம், பூவைத்தேடி ஆகிய கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சாகுபடி செய்த நிலக்கடலை பயிர்கள் அறுவடை நேரத்தில் பொய்த்து போய் விட்டது. அறுவடை செய்து பார்த்தால் நிலக்கடலை இல்லாமல் வெறும் கூடாக இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.