திருப்பூர், மார்ச் 1: அனுப்பர்பாளையம் பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று நடந்த எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் எவர்சில்வர், செம்பு, பித்தளை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் உள்ளன. இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பாத்திர உற்பத்தி சங்க நிர்வாகிகள் இடையே கடந்த ஜனவரி 27ம் தேதி முதல் பலகட்டங்களாக நடைபெற்று வருகிறது. பித்தளை தொழிலாளர்களுக்காக நடைபெற்ற 5ம் கட்ட பேச்சுவார்த்தையில், உற்பத்தியாளர்கள் தரப்பில் பித்தளை மற்றும் செம்பு பாத்திர தொழிலாளர்களுக்கு 30 சதவீதமும், வார்ப்பு பாத்திர தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக 40 சதவீதமும் வழங்க சம்மதம் தெரிவித்தனர்.
இந்த சம்பள உயர்வை தொழிற்சங்கத்தினரும் ஏற்றுக் கொண்டனர்.