வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கொடைக்கானல், மார்ச் 1: வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். தூண்பாறை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், குணா குகை, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் தலைகளாகவே தென்பட்டன. இதில் தூண்பாறை, மோயர் பாயிண்ட் பகுதிகளில் மேகமூட்டம் நிறைந்து இருந்ததால் பகல் பொழுது கூட மாலை போல் மங்கி காணப்பட்டது. எனினும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து மேகமூட்டங்கள் விலகியதும் கண்டு ரசித்தனர். இதேபோல் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள்- டூவீலரில் ரைய்டிங் செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தற்போது குளிர்சீசன் காலம் என்பதால் கொடைக்கானல் முழுவதும் பகல் பொழுதிலேயே குளிர் இருந்து வருகிறது.  எனினும் குளிரை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் இயற்கை கொஞ்சும் அழகினை கண்டு ரசித்தனர். சுற்றுலா வாகனங்களின் வருகை அதிகரிப்பால் ஆங்காங்கே நெரிசல் ஏற்பட்டது. எனவே விடுமுறை நேரங்களில் போக்குவரத்தை சீர்செய்ய கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: