அரியலூர், பிப். 27: சாக்குகள் பற்றாக்குறையால் திருமானூர் பகுதி நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர். அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான தா.பழூர், திருமானூர் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு இல்லாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர். திருவெங்கனூர் விவசாயிகள் 6 மாதம் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்து அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வந்தால் சாக்கு இல்லையென கூறுவதால் வீட்டுக்கும் கொண்டு செல்ல முடியாமல் மீதம் அறுவடையாகும் நெல்லை எடுக்கவும் செல்ல முடியாமல் நெல்லை பாதுகாக்க தார்ப்பாய் வாடகை, நாள் கணக்கில் கூலியாட்களை காவலுக்கு வைத்து விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் வேதனையோடு காத்திருக்கின்றனர்.இதுகுறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் கூறுகையில், நெல்லை விவசாயிகளை காத்திருக்க வைக்காமல் உடனடியாக சாக்கு பற்றாக்குறையை போக்கி கொள்முதல் முறைப்படுத்தப்பட வேண்டும். பண பட்டுவாடாவை உடனடியாக வழங்க வேண்டும். இனி வருங்காலங்களில் நெல்லை உத்தரப்பிரதேச மாநில அரசு போன்று நெல் கொள்முதல் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மொத்தமாக விவசாயிகள் உற்பத்தி செய்து தரும் நெல்லை அப்படியே சாக்கு பயன்படுத்தாமல் லாரிகளில் ஏற்றும் நடைமுறையை கொண்டுவர வேண்டும். நேரம் விரயமாவதை தடுக்க இயலும்.