திருவண்ணாமலை, பிப்.26: திருவண்ணாமலை நகராட்சியில் வரி வசூல் என்ற பெயரில் மிரட்டும் அதிகாரிகளை வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கண்டிப்பதாக அதன் மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்தார். திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. பெரிய, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்கிறது. ஆனால், சிறு வணிகர்களுடைய கடன்களை, கந்து வட்டிக்காரர்கள் போன்று, ஆட்களை வைத்து மிரட்டி வங்கிகள் வசூலிக்கின்றன. இத்தகைய போக்கை மத்திய அரசும், மாநில அரசும் கண்டும் காணாமல் இருக்கிறது.