திருப்பூர், பிப்.26: திருப்பூர் தென்னம்பாளையம் மேற்கூரையின்றி மொத்த காய்கறி சந்தை காய்கறிகள் வாடுவதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் பிரிவில் மொத்த காய்கறி சந்தை செயல்படுகிறது. இந்த சந்தைக்கு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து தினமும் 700 டன் முதல் ஆயிரம் டன் வரை காய்கறி வரத்து உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மொத்த காய்கறி சந்தை வளாகத்தில் புதிய கடைகள், விற்பனை வளாகம் அமைக்கும் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இங்கு வியாபாரம் செய்த மொத்த காய்கறி வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் மாற்று இடத்தில் வியாபாரம் செய்ய இடத்தை ஒதுக்கி கொடுத்தனர். இந்த இடம் முழுவதும் திறந்த வெளியாக உள்ளதால் காய்கறிகளை திறந்த வெளியில் வைத்து தான் விற்பனை செய்கின்றனர். மொத்த காய்கறி வியாபாரிகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு மொத்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்.