பரமத்தி வேலூர், பிப்.26: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கபிலர்மலை வட்டார தென்னை விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்த தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிலிக்கல்பாளையத்தில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கான தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்த கருத்தரங்கு மற்றும் தென்னையை தாக்கும் வண்டுகள், அதன் வாழ்க்கை சுழற்சி முறை, முட்டையிலிருந்து கூட்டுப்புழு வரை தென்னையை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த விளக்கப்பட கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி அரங்கை வேளாண் இணை இயக்குனர் சேகர் திறந்து வைத்தார். மேலும், தஞ்சை மாவட்டம் வேப்பங்குளத்தில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் கார்த்திகேயன் விளக்கி பேசினார். அப்போது, தென்னையில் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகளான காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு மற்றும் வெள்ளை பூச்சியினால் ஏற்படும் இழப்புகள் குறித்தும், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வழிமுறைகளையும் காணொலி காட்சி மூலம் விளக்கினார்.