சென்னை, பிப். 26: தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்ய சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:
தமிழகத்தில் அத்தியாவசிய உணவு பொருளாக விளங்கும் பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் பால் தட்டுப்பாடு என்கிற காரணத்தை கூறி 2020ம் ஆண்டில் இரண்டாவது முறையாக பால் விலையை லிட்டருக்கு 2 முதல் 6 வரை உயர்த்தியுள்ளன. தமிழக பால் தேவையில் நாளொன்றுக்கு சுமார் 84 சதவீதம் (1.25 கோடி லிட்டர்) பாலை தனியார் நிறுவனங்களே பூர்த்தி செய்து வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2020 பிப்ரவரி மாதம் வரை பலமுறை விலையை உயர்த்தினாலும், ₹9 வரை மட்டுமே கொள்முதல் விலையை உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தி வழங்கியுள்ளன. அதேநேரம் ஆவின் நிறுவனங்கள் 12 வரை உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தி வழங்கியுள்ளது.