ஊட்டி, பிப். 25: ஊட்டி அருகேயுள்ள மசினகுடி பகுதியில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடையை திறக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. ஊட்டியில் அருகே மசினகுடி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக டாஸ்மாக் மதுக்கடை ஒன்று இயங்கி வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த மதுக்கடை அகற்றப்பட்டது.
இதனால், இந்த கிராமத்தை சேர்ந்த மது பிரியர்கள் தொலை தூரத்தில் உள்ள கூடலூர், ஊட்டி போன்ற பகுதிகளுக்கு வந்தே வாங்கிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், இவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும், மசினகுடி பகுதியில் தனியார் சார்பில் நடத்தப்பட்டு வரும் பார் ஒன்றில் மது வாங்கி குடிக்க வேண்டியுள்ளதால், அங்கு விலை அதிகம் என்பதால் குடிமகன்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.