காரைக்குடி, பிப்.20: பனந்தோப்பு பகுதியில் தனி நபர் சாலையை ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை பணியை நிறுத்தி மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் பாதாளசாக்கடை திட்ட பணிகள் நடந்தது வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இப்பணி ஆமை வேகத்தில் நடப்பதால் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில் பாதாளசாக்கடை திட்டத்துக்கு தோண்டிய பள்ளத்தில் மக்கள் விழுவது வாடிக்கையாகி வருகிறது. பல்வேறு இடங்களில் பணியை முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால் சாலை அமைக்க முடியாமல் உள்ளது. பணி முடிந்த ஒருசில பகுதிகளில் நகராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சந்தைபேட்டை பனந்தோப்பு பகுதியில் பாதாளசாக்கடை திட்டம் முடிந்து சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது. இப்பகுதியில் தனி நபர் ஒருவர் தனது வீட்டின் முகப்பு மற்றும் செப்டிக் டேங்கை சாலையை ஆக்கிரமித்து அமைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.