காரைக்குடி, பிப்.20: ஆள், அறுவடை இயந்திரம் பற்றாக்குறையால் காலம் முடிந்தும் அறுவடை செய்யாததால் நெல் மணிகள் வயலில் விழுந்து வீணாகி ஏக்கருக்கு 5 மூடை வரை நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 65 ஆயிரம் எக்டேருக்கு மேல் விவசாயபணிகள் நடக்கிறது. காரைக்குடி தாலுக்காவை பொறுத்தவரை கல்லல் ஒன்றியத்தில் 5000 எக்டேருக்கு மேலும், சாக்கோட்டை ஒன்றிய பகுதியில் 5000 எக்டேருக்கு மேலும் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது மழை ஓரளவு கை கொடுத்ததால் நெல் பயிரிடப்பட்டுள்ளது. டீலக்ஸ் பொன்னி, கல்சர் பொன்னி ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் பருவமழையை நம்பியே இப்பகுதியில் விவசாயப்பணிகள் நடந்து வருகிறது. நெல்லை பொறுத்தவரை ரகத்துக்கு ஏற்றார் போல் 130 முதல் 135 நாளில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் இயந்திரத்தை நம்பியே இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த இயந்திரத்தை பொறுத்தவரை மாவட்டத்திற்கு அதாவது 65 ஆயிரம் எக்டேருக்கே ஒன்றே ஒன்றுதான் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் தனியார் இயந்திரத்தை நம்பியே காத்திருக்கின்றனர். அவர்களும் பெரிய விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சென்று விடுகின்றனர். சிறிய அளவில் 3 முதல் 5 ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு உடனே வருவது கிடையாது. இதனால் அறுவடை காலம் முடிந்தும் 160 நாட்களுக்கு மேலாக நெல் அறுவடை செய்யப்படாமல் உள்ளதால், நெல் மணிகள் வயலில் விழுந்து வீணாகி வருகிறது. தவிர அதிக நாட்களுக்கு பிறகு அறுப்பதால் நெல் கலர் மாறி நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்யமுடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அறுவடைக்கு ஆட்களும் கிடைக்காமல், இயந்திரமும் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.