திருப்பூர், பிப்.20: நிட்மா சங்கம் சார்பில் விஷன் இந்தியா 2020-2025 பின்னலாடை தொழில் சிறப்பு கூட்டம் வரும் 21ம் தேதி ஐ.கே.எப். கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.திருப்பூரில் கடந்த 1978ல் பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா) துவங்கப்பட்டது. சங்கத்துக்கு தற்போது 42 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2003ல் நடந்த இச்சங்க வெள்ளி விழாவில், அப்போது குடியரசு தலைவராக இருந்த அப்துல்கலாம் பங்கேற்று 5 ஆயிரம் கோடியாக இருக்கும் திருப்பூரின் பின்னலாடை வர்த்தகம், 2020ல், ஒரு லட்சம் கோடி என்கிற வர்த்தகத்தை எட்டவேண்டும் என தெரிவித்தார். கலாமின் கனவை நனவாக்கும் வகையிலும், சங்க பொன் விழாவை கொண்டாடும் வகையில், நிட்மா சங்கம் சார்பில், விஷன் இந்தியா 2020-2025 பின்னலாடை தொழில் சிறப்பு கூட்டம் வரும் 21ம் தேதி, அவிநாசி, பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.இது குறித்து நிட்மா தலைவர் ரத்தினசாமி, செயலாளர் ராஜாமணி ஆகியோர் கூறியதாவது:நிட்மா வெள்ளி விழாவில் பங்கேற்ற அப்துல்கலாம் 2020ல், ஒரு லட்சம் கோடி வர்த்தகத்தை திருப்பூர் எட்ட வேண்டும் என்கிற லட்சிய கனவை விதைத்து சென்றார். தற்போது, ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் என, மொத்தம் 56 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்டியுள்ளோம்.