மஞ்சூர், பிப்.20:மஞ்சூர் அருகே அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்களை காட்டு யானை ஒன்று வழி மறித்ததால் பயணிகள் பீதி அடைந்தனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கெத்தையை சுற்றிலும் உள்ள வாழை, பாக்கு மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதுடன், ேராடுகளில் நின்று வாகனங்களை வழிமறிப்பது வாடிக்கையாக உள்ளது. நேற்று முன்தினம் கோவையில் இருந்து 40 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று மஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பெரும்பள்ளம் அருகே சென்றபோது எதிரே காட்டு யானை ஒன்று நடுரோட்டில் சாலையை மறித்தபடி நின்று கொண்டிருந்தது. இதை கண்டவுடன் டிரைவர் பேருந்தை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார். இதேபோல் மஞ்சூரில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் வாகனங்களும் காட்டு யானைகளின் வழி மறிப்பில் சிக்கி ஓரங்கட்டி நிறுத்தப்பட்டன. நடுரோட்டில் காட்டு யானையை கண்ட பயணிகள் பீதி அடைந்து பேருந்தில் அமர்ந்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானை பின்னர் மெதுவாக நடந்து சென்று சாலையோர காட்டுக்குள் இறங்கியது. இதன்பின்னே பயணிகள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.