திருப்பூர், பிப். 19: இந்து அமைப்பினர் சார்பில் எங்கள் போராட்டத்திற்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு தர வேண்டும் என இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நேற்று கலெக்டர் விஜயாகார்த்திகேயனிடம் கோரிக்கை வைத்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 14ம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர், அறிவொளி ரோட்டில் கடந்த 15ம் தேதி காலை முதல் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்றும் 4வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசும் குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று (19ம் தேதி) கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். இது தொடர்பாக அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், வருவாய் அலுவலர் சுகுமார், போலீஸ் எஸ்.பி.திஷா மித்தல், தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பின் செயலாளர் ஜக்ரியா தலைமையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.