அந்தியூர், பிப்.19: காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக முதலமைச்சர் அறிவித்தது வெற்று அறிவிப்பு என சுப்பராயன் எம்.பி. குற்றம்சாட்டினார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அவர் பொதுமக்களை சந்தித்து நேற்று குறைகளைக் கேட்டறிந்தார். அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடம் கட்ட தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான இடத்தை பார்வையிட்டார். வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலகம் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அதன்பின் சுப்பராயன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது: அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மிகுந்த வறட்சியான பகுதி. மழைக்காலங்களில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது, அந்த உபரி நீரை வாய்க்கால்கள் வழியாக கொண்டு வந்து அந்தியூர், அம்மாபேட்டை, பவானி ஒன்றியப் பகுதிகளை வளமான பகுதியாக மாற்றுவதற்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசுவேன்.