திருப்பூர், பிப்.18: திருப்பூரில், வீட்டு வாடகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். தொழில் நகரமான திருப்பூரில், வெளியூர் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். வேலைதேடி, திருப்பூர் வரும் இவர்களுக்கு, வேலையை காட்டிலும், பெரிய பிரச்னையாக இருப்பது, வாடகை வீடுகள். காரணம், நியாயமான வாடகைக்கு வீடுகள் கிடைப்பது, திருப்பூரில் குதிரை கொம்பாகி வருகிறது. வீட்டுக்கு வெளியே உள்ள கழிப்பறையுடன், இரண்டு அறைகளை கொண்ட வீட்டுக்கு வாடகை, ஐந்து ஆயிரம் ரூபாய் என்கிறார்கள். குறைந்தது, 10 மாத வாடகை தொகையை, அட்வான்சாக வாங்கிக் கொள்கின்றனர். இதுதவிர, புரோக்கர் கமிஷன் கொடுத்தாக வேண்டும். இத்தகைய வீடுகளில், அடிப்படை வசதிகள் சரிவர இருக்காது. தண்ணீர், சுற்றுச்சுவர் போன்ற வசதிகள்கூட பெயரளவுக்கே இருக்கும். ஒரே காம்பவுண்டில் உள்ள லைன் வீடுகள் என்றால், முறைவாசல், தண்ணீருக்கான பொது மோட்டாருக்குரிய மின் கட்டணம், பராமரிப்பு செலவு என கூடுதலாக தொகையை ‘கறக்கும்’ வீட்டு உரிமையாளர்களும் உண்டு. வசதி படைத்த வீடு அல்லது அப்பார்ட்மென்ட் என்றால், மாத வாடகை 10 ஆயிரம் ரூபாயை தொடும். தவிர, சுவற்றில் ஆணி அடிக்கக்கூடாது என்பதில் தொடங்கி, விருந்தினர்கள் வந்தால், வீட்டில் தங்க வைக்கக் கூடாது என்பது வரை, பல்வேறு நிபந்தனைகளை, வீட்டு உரிமையாளர்கள் விதிக்கின்றனர்.