மஞ்சூர்,பிப்.18: ஊராட்சி பம்ப் ஆபரேட்டர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்ட ஊராட்சி குடிநீர் குழாய் பம்ப் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) கூட்டம் மஞ்சூர் அருகே உள்ள ஆருகுச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் குமார், மோகன், வைதேகி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக சங்க மாவட்ட பொது செயலாளர் ரகுநாதன், மாவட்ட செயலாளர் போஜராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள். அரசாணைபடி ஊராட்சிகளில் பணியாற்றி வரும் குடிநீர் பம்ப் ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.14 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் அதன் நிலுவை தொகை ரூ.78 ஆயிரத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 1992 முதல் 2005 வரை வழங்க வேண்டிய சிறப்பூதிய நிலுவை தொகை மற்றும் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேசன் செய்யும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.500 வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.